சமீபத்தில் வெளிவந்து இந்தியாவே திரும்பி பார்த்த8 மலையாளப் படங்கள்என்ற தலைப்பில் ஒரு பட்டியல் கிடைத்தது. 8 படங்களில் ஏழு பார்த்தாகி விட்டது. உண்மைதான். மிக நல்ல படங்கள். வெறும் காதல், சண்டை என்று அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் நிலையிலிருந்து அவர்கள் எவ்வளவு விலகி நல்ல தரமான படங்கள் எடுக்கிறார்கள்.
தமிழ்ப்பட இயக்குநர்களே … கொஞ்சம் பக்கத்து வீட்டுப் படங்களையும் எட்டிப் பாருங்களேன் ..
பட்டியல்:
1.அய்யப்பனும்கோஷியும்
2. வரனேஅவஷ்யமுண்டு
3. ட்ரான்ஸ்
4. கப்பெல்லா
5. ஃபாரன்ஸிக்
6. ஆண்ட்ராய்டுகுஞ்சப்பன்
7. டிரைவிங்லைசென்ஸ்
8. அஞ்சாம்பத்திரா
8 படத்தில் கடைசிப் படம் தவிற ஏனைய படங்களைப் பார்த்து விட்டேன்.
ட்ரான்ஸ் -- ஏற்கெனவே பார்த்து ஒரு குறிப்பும் எழுதியுள்ளேன்.கிறித்துவ மதப் போதகர்கள் கூட்டம் செய்யும் மோசடியை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். ஆனாலும், சும்மா சொல்லக்கூடாது நீங்கள் எவ்வளவு சரியாகச் சொன்னாலும் கிறித்துவ மத நம்பிக்கையாளர்கள் எல்லோரும் இதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் .. அவர்கள் வழியே தனி வழி.
அய்யப்பனும் கோஷியும், ட்ரைவிங் லைசன்ஸ்என்ற இரு படங்களின் knotஏறத்தாழ ஒன்று தான். சீருடை அணிந்த ஓர் அரசு ஊழியருக்கும் பிரபலமான அல்லது செல்வாக்குள்ள ஒருவருக்கும் ஏற்படும் சண்டையில் உள்ள ego பிரச்சனை தான். ஆனால் முந்தியது வல்லினம்; அடுத்ததோ மெல்லினம் தான். நிறைவைத் தரும் படங்கள். இரண்டிலும் பிரித்விராஜ். முதல் படத்தில் இயற்கையாக இயல்பாக நடித்துள்ளார்.
கப்பெல்லா .. நம் தமிழ்ப்படம் மாதிரி. கொஞ்சம் காதல்.. கொஞ்சம் சண்டை. ஆனால் இதில் வரும் கதாநாயக, வில்லன் பாத்திரங்களுக்குக் கொடுக்கும் வித்தியாசமான பின்புலம் கதைக்கு நல்ல வலுவைக் கொடுத்துள்ளது.
ஃபாரன்ஸிக் .. கதாசிரியர் படித்து, உழைத்து அறிவியலோடு உருவாக்கிய கதை. A gripping story.
வரனேஅவஷ்யமுண்டுகதை மெல்ல நகருகிறது. பிடித்து நம்மை நிறுத்தவில்லையே என்றிருக்கும் போது கடைசியில் நெஞ்சிற்கு நெருக்கமான காட்சிகள் வந்து நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றன.
ஆண்ட்ராய்டுகுஞ்சப்பன் கேரளாவின் சிறு கிராமத்தில் வசிக்கும் eccentricபெரியவர் தன்னைத் தனியே விட்டுச் செல்லும் மகனிடம் கோபத்தில் இருக்கிறார். அப்பாவின் மகன் (அந்த நடிகரின் பெயர் கூட எனக்குத் தெரியாது; தமிழ்நாட்டுக் கதாநாயக அந்தஸ்து அவருக்கில்லை!) கொடுத்த ரோபாட்டுடன் பழக ஆரம்பித்து அதுவே அவருக்கு மகனாக ஆகிவிடுகிறது. கேவலமான பிரம்மாண்டப் படங்கள் தரும் நம் இயக்குநர் சங்கருக்கு யாராவது இந்தப் படத்தை ஒரே ஒரு தடவை போட்டுக் காண்பியுங்களேன்.இதில் வரும் கதாநாயகன் நம் ரசினி மாதிரி உதட்டைச் சுழித்துக் கொண்டு “ரோபாட்” என்றெல்லாம் சொல்ல மாட்டார். கடைசி சீன் மனதை வருடி வருத்திச் சென்று முடிகிறது. அதோடு செளடாமணி என்ற அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு வரும் குறுஞ்செய்திகள் யாரிடமிருந்து என்று தெரியாமலே கதையை முடித்ததும் ( பெரியவரின் சின்ன வயதுக்காதலி அவர்!) நமது சோகத்தை அதிகப்படுத்தியது.